சென்னை வேளச்சேரி, ராதா நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் கவிதா(35) இவர் இரண்டாவது மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவரது கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டின் அருகே இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்தார். இவர் தினந்தோறும் காய்கறி பழங்களை வாங்க கிண்டியை சேர்ந்த முருகன் (65) என்பவரது சரக்கு வாகனத்தில் ( TATA ACE), செல்வது வழக்கம். 



இந்நிலையில் கடந்த ஒன்னறை மாதமாக 65 வயது தாத்தா, கவிதாவிற்கு காதல் வலை வீசியுள்ளார்.காதல் வலையில் கவிதாவை சிக்க வைக்க பல்வேறு யுக்திகளை கையாண்ட காதல் ரோமியோவிற்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் மட்டுமே. கவிதா கண்டுகொள்ளாத நிலையிலும் தொடர்ந்து கவிதாவிற்கு காதல் வலை வீசி வந்துள்ளார் இந்த முதியவர்.

 

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய கவிதா, காதல் ரோமியோ முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார். இதனால் இரண்டு வாரங்களாக காதல் ரோமியோ முருகன் தாத்தா, கவிதாவை பார்க்க முடியாமல் தவித்துள்ளார். காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன் என புலம்பியுள்ளார். 


இரண்டு வாரங்கள் பார்க்க முடியாத ஏக்கத்தில் கவிதாவின் வீட்டிற்கே சென்று பார்த்து விட டிப்டாப்பாக சென்றார் முருகன். அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு கவிதா வீட்டில் இல்லை , இதனால் கடும் விரக்தியடைந்து மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் முருகன், கவிதா வீட்டிற்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்த வீட்டின் உரிமையாளர் தீயை அணைக்க முயன்ற பொழுது வீட்டின் உரிமையாளருக்கு வலது தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டது. 



முருகன் தொல்லையிலிருந்து தப்பிக்க கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டின் உரிமையாளர் கவிதாவை தொடர்பு கொண்டு உங்கள் வீடு எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து சேதமாயின. 




இது குறித்து கவிதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் வீடு எரியும் போது மாடியில் இருந்து ஒருவர் சென்றதாக தெரிவித்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது காதலை ஏற்க மறுத்ததாலும், இரண்டு வாரங்களாக தன்னை சந்திக்காமல் இருந்ததாலும் ஆத்திரத்தில் வீட்டை எரித்ததாக ஒப்புக் கொண்டார் 65 வயது காதல் ரோமியா முருகன். 

 

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதியவரின் ஒரு தலை காதலால் வாடகை வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் கவிதாவின் நிலை தான் மிகவும் பரிதாபமானதாக உள்ளது.