தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.80க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரூபாய் 100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல்,  நேற்று முதன்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 100ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 33 காசு அதிகரித்து நேற்று ரூபாய் 100.13க்கு விற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மாநிலத்திலே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக ரூபாய் 102க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது.


இந்த நிலையில், நேற்று ரூபாய் 93.72 காசுகளுக்கு விற்கப்பட்ட டீசல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 93.86க்கு விற்கப்படுகிறது. நேற்று 100.13 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 47 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.27க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி(அதாவது 10 நாட்களுக்கு முன்பு) ரூபாய் 98.65க்கு சென்னையில் பெட்ரோல் விற்கப்பட்டது.




நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


கலால் வரி என்பது மத்திய மாநில அரசுகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரி. கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை தற்போது மேலும் குறைந்து 40 டாலராக உள்ளது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பலவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.  




சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 


தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை ஆகிய நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.