சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தமைக்காக போலீஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தெலங்கானா மாநிலம் சங்கர்பல்லியில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.அவர்கள் வாழ்ந்து வந்த வீடு சேகர் வாடகைக்கு விட்டிருந்த வீடாகும். கான்ஸ்டபிளாக இருக்கும் சேகர், அவ்வப்போது சிறுமியிடம் ஏதாவது வலுக்கட்டாயமாக பேச்சு கொடுப்பதாக இருந்துள்ளார். சம்பவத்தன்று அதாவது கடந்த செவ்வாய்க் கிழமையன்று சேகர் சிறுமியின் வீட்டை நோட்டம் விட்டுள்ளார்.


இரவு நேரத்தில், சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாததை அவர் உறுதி செய்து கொண்டார். பின்னர் அவர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியுடன் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் தாயார், சேகரைப் பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் கூட, போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சேகர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள்!


தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 1,48,185 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு இருக்கின்றது.


போக்ஸோ சட்டம் என்றால் என்ன?


போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3. அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தங்களிடம் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாற வேண்டும். போக்ஸோ நீதிமன்றங்கள் வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் குற்றங்களும் குறையும்.