நாகர்கோவிலில் பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டி.வி.டி.காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. அந்த கிணறு தற்போது பயன்பாடு இல்லாமல் குப்பைகள் நிறைந்து, பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் கழிவுநீரும் தேங்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று கிணற்றில் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்ததை, அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே. இதுபற்றி கோட்டார் போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றை பார்வையிட்டனர்.

 

அதே சமயம் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கினார்கள். அப்போது கிணற்றின் ஒரு ஓரத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி கிணற்றின் மேலே வீரர்கள் கொண்டு வந்தார்கள். பின்னர் எலும்புக்கூடு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தினமும் இரவு நேரத்தில் இந்த கிணற்றின் அருகே ஒரு ஆசாமி மது அருந்தி வந்ததாகவும், அந்த ஆசாமி கடந்த சில நாட்களாக இங்கு வரவில்லை என்றும் தெரிய வந்தது. இதனால் சம்பவத்தன்று அந்த ஆசாமி கிணற்றின் அருகே மது அருந்தும் போது, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.