Crime: ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், அவரது மகளும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஹரியானா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி:


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தீப் கோயால் (35). இவர் ஹிசாரில் உள்ள லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு முதல் பேராசிரியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது 8 வயது மகளை ஸ்கூட்டரில் அழைத்து சென்றிருக்கிறார்.


வெளியில் அழைத்து செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். தனது மகளுடன் சந்தீப் கோயால் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், அவரது மனைவி பலமுறை அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அதற்கு பதலளிக்காததால், மனைவி அவர்களை தேடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்துள்ளார். 


பல்கலைக்கழகத்திற்கு வெளியே கணவர் ஸ்கூட்டர் இருப்பதையும் பார்த்திருக்கிறார். இதனை அடுத்து, பல்கலைக்கழகத்தில் கணவரின் அலுவலக அறைக்கு சென்ற பார்த்தபோது, குழந்தை மற்றும் கணவர் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 


மகளை கொன்ற தந்தை:


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. 


அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியால் சந்தீப் கோயல் தனது எட்டு வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சந்தீப் கோயால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்காக சந்தீப் கோயால் சிகிச்சை பெற்று வருவதகாவும் நண்பர்கள் கூறுகின்றனர்.


நாங்கள் அனைவரையும் விசாரித்து வருகிறோம். சந்தீப் கோயாலின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரையும் விசாரித்து வருகிறோம். இரண்டு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைனக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். 8 வயது மகளை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)