நெல்லை மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர். இவர் மீது சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தென் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியாக வெள்ளை சுந்தர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் வெள்ளை சந்தர் தனது உறவினரான அஜய் கோபி என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இருப்பினும் பழைய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவ விட்டு பொதுமக்கள் மத்தியில் ஆயுத கலாச்சாரத்தை தூண்டியதாக நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர்.


மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட வெள்ளை சுந்தர் தலைமறைவானதாக கூறப்பட்டது. அதே சமயம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெள்ளை சுந்தர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது திடீரென வெள்ளை சுந்தர் கடும் போலீஸ் பாதுகாப்பை மீறி நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கணக்கான போலீசார் நடமாடும் நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கின் குற்றவாளி சாதாரணமாக தப்பி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வாசிவம் தான் குற்றவாளி வெள்ளை சுந்தரை தப்ப விட்டதாக கூறப்பட்டது. எனவே பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வாசிவத்தை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டார். மேலும் தப்பி ஓடிய வெள்ளை சுந்தரை பிடிக்க தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருப்பதி தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிப்படையை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அமைத்தார் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக வெள்ளை சுந்தர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.


தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடி வந்தனர். ஆனால் வெள்ளை சுந்தர் வெளி மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதற்கிடையில் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பரை கைப்பற்றிய போலீசார் சைபர் கிரைம் போலீசார் மூலம் அந்த செல்போன் நம்பரின் டவர் லொகேஷனை கண்காணித்தனர். அதில் தலைநகர் டெல்லி பகுதியில் வெள்ளை சந்தரின் செல்போன் டவர் லொகேஷன் காட்டியுள்ளது. இதையடுத்து டெல்லி போலீசாருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து வெள்ளை சுந்தரை பிடித்து தரும்படி மாநகர காவல்துறை கூறியுள்ளனர். அதன்படி டெல்லி போலீசார் இன்று வெள்ளை சுந்தரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து ஆய்வாளர் திருப்பதி தலைமையான தனிப்படை போலீசார் வெள்ளை சுந்தரை கைது செய்து நெல்லைக்கு கொண்டு வருவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் முறைப்படி வெள்ளை சுந்தரை ஆஜர் செய்து விட்டு நாளை அவரை நெல்லைக்கு அழைத்து வர இருக்கின்றனர். நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பி ஓடிய நிலையில் அவரை டெல்லி போலீசார் கைது செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண