திருவண்ணாமலையில் நான்கரை வயது கொண்ட, எல்கேஜி பயிலும் குழந்தையை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் தாளாளராக உள்ள பிரபாவதியின், கணவர் காமராஜ் என்பவர் சேத்துப்பட்டு அடுத்த உலகம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காமராஜ் அவ்வப்பொழுது தனது மனைவி பிரபாவதி நடத்திவரும் ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வருவதை வழக்கமாக தொடர்ந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எல்கேஜி பயிலும் நான்கரை வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள நோட்டு புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோர்களிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்து அழுதுள்ளார். அதன் அடிப்படையில் பெற்றோர்கள் சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர், அப்போது மருத்துவர்கள் யூரின் இன்பெக்சன் இருப்பதாக கூறி சிறுமிக்கு மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நிலை சரியாகி வழக்கம்போல் மீண்டும் பள்ளிக்குச் சென்ற சிறுமியை ஆசிரியர் காமராஜ் மீண்டும் சாக்லேட் கொடுத்து புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமிக்கு வயிற்று வலி அதிகமாகி ரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் அழுது, வயிறு வலிக்கிறது என்று தெரிவித்ததன் அடிப்படையில் பெற்றோர்கள் சிறுமியின் உள்ளாடையில் ரத்தக்கறை இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் மனு அளித்தனர்.


அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோர் இன்று ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய வீடியோவை சேகரித்து சிறுமியை அழைத்து பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குரூப் போட்டோவை காண்பித்து இதில் யார் சாக்லேட் கொடுத்து வன்கொடுமை செய்தார்கள் என்று கேட்டனர். அப்போது  பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பவரின் புகைப்படத்தை காண்பித்து இவர்தான் என்னை புத்தக அறைக்கு அழைத்து சென்று சாக்லேட் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.


இதனடிப்படையில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை தேடிய நிலையில், அவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றதாக தகவல் வந்தது. இதையடுத்து, காமராஜ் சென்ற காரின் பதிவு எண் கொடுத்து கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து திரும்பிவரும் வழியில் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் காமராஜை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர்.


இந்த நிலையில்,  அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். 


இது குறித்து மாவடட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில், ”பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, புகார் அளித்த அரைமணிநேரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய வழியில் எட்டயபுரத்தில் வைத்து, அரசுப்பள்ளி ஆசிரியர் காமராஜ் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் முதற்கட்டமாக குழந்தைக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குழந்தையின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார். 


மேலும் குழந்தைக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டாலும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் எனவும், இதுபோன்ற குற்றங்களில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்