செல்ஃபி எடுப்பதற்காக காதலி மற்றும் மகளை காதலன் ஆற்றில் தள்ளிய சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 


செல்ஃபி மோகம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஆட்டிப்படைத்துள்ளது. ஆபத்தை உணராமல் எடுக்கப்படும் போட்டோக்கள் பல நேரம் மகிழ்ச்சியை விட சோகமான நினைவுகளையே பரிசாக தரும். சில நேரம் நம்முடைய தேவைக்காக பிறரை துன்புறுத்தி புகைப்படங்கள் எடுக்க நினைப்போம். உயிரினங்களை கூட விட்டு வைக்க மாட்டோம். அப்படி ஒரு சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. 


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள  ரவுலபாலம் போலீசாருக்கு அவசர உதவி எண் '100' மூலம்  நேற்று அதிகாலை 3.50 மணியளவில்  போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய சிறுமி ஒருவர் தான் கோதாவரி ஆற்றின் குறுக்கே செல்லும் கவுதமி மேம்பாலத்தில் உள்ள குழாயை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் கேட்டுள்ளார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


அச்சிறுமி சொன்னபடியே கோதாவரி ஆற்றின் மேம்பால குழாயில் அவர் தொங்கிக்கொண்டு உதவிக்காக குரல் கொடுத்து கொண்டிருந்ததை கண்டனர்.இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் உதவியுடன்  மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் கீர்த்தனா என்பதும், அவரது தாயார், சகோதரி கோதாவரி ஆற்றில் தள்ளி விடப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இவற்றையெல்லாம் செய்தது சிறுமியின் தாயாரின்  காதலன் தான் என தெரிய வந்தது. 


காதலன் பெயர் சுரேஷ் என்பதும், தனது அம்மா சுஹாசினியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார். தங்களை ராஜமுந்திரி அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து வந்தார். ரவுலபாலம் வந்ததும் செல்ஃபி எடுப்பதாக கூறி காரை சுரேஷ் நிறுத்தி 3 பேரையும் கோதாவரி ஆற்றில் தள்ளினார். நான் அங்கிருந்த குழாயை பிடித்து உதவி கோரினேன். அதிர்ஷ்டவசமாக என் பாக்கெட்டில் மொபைல் போன் இருந்ததால் போலீசிடம் உதவி கோரினேன் என தெரிவித்திருக்கிறார். 


இதனைத் தொடர்ந்து கோதாவரி ஆற்றில் தள்ளப்பட்ட சுஹாசினி மற்றும் ஒரு வயது மகள் ஜெர்சியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தப்பியோடிய சுரேஷை பிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.