திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் சக பள்ளி மாணவர்களை ராகிங் நடனம் ஆட வைப்பது போலவும் ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிற வைத்துள்ளனர். இதில் நடனம் ஆடாத மாணவர்களையும் காற்று வீசாத மாணவர்களை உடன் பயிலும் மாணவர்கள் அடித்துள்ளனர். கல்லூரிகளிலேயே மாணவர்களுக்குள் மாணவர்கள் ராக்கிங் செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இதுபோல பள்ளிகளில் மாணவர்கள் ராகிங் செய்வதை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளது வேதனை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.




செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ராகிங் செய்வது மட்டுமல்லாமல் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியாகி உள்ளனர். இந்நிலையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக திருவண்ணாமலை துணை ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் பள்ளி வளாகத்தில் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் துணை ஆட்சியர் வெற்றிவேல் செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி அரவிந்தன் மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசேகரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரேவதி முருகமணி தலைமையாசிரியர் காமத் ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்று வகுப்பறையில் நடனமாடிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை வரவழைத்து மாலை 3 மணி முதல் 7 மணி வரையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.



இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நடனமாடி அட்டகாசம் செய்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வகுப்பறையில் நடந்த சம்பவம் தொடர்பாக எழுத்துபூர்வமாக கடிதம் ஒன்று எழுதி வாங்கபட்ட நிலையில்தொடர்ந்து பாட்டு பாடி நடனமாடிய 5 மாணவர்களை ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முந்தைய நாளான மே 4ஆம் தேதி வரை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.