கேரளாவில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு இரண்டாவது கணவருடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செறுபுழா பகுதியின் நகுடி என்ற ஏரியாவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா.  38 வயதான இவருக்கு திருமணமாகி சூரஜ், சுபின், சுரபி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவர் சுனில் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீஜா கணவரை ஒரே வீட்டில் தனி அறையில் தனது 3 குழந்தைகளுடன் வசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் செறுபுழாவைச் சேர்ந்த் 40 வயதான ஷாஜி என்பவர் ஸ்ரீஜாவுக்கு அறிமுகமானார். 


ஏற்கனவே ஷாஜிக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இப்படியான சூழலில் இருவரும் முதலில் நண்பர்களாக பழக தொடங்கியுள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில் ஷாஜி - ஸ்ரீஜா இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி விமரிசையாக மறுமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். 


இதனிடையே நேற்று காலை ஸ்ரீஜா வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அதேசமயம் திடீரென அவர்கள் வீட்டுக்கு போலீசார் வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கூட்டம் ஸ்ரீஜா வீட்டை சுற்றிக் கூடியது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தப்போது 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, ஸ்ரீஜா - ஷாஜி இருவரும் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதற்கிடையில் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஸ்ரீஜா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில் சுனில் குமார் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்ரீஜா மற்றும் ஷாஜி மீது போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தம்பதியினரை வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நேற்று  (மே 24) பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஸ்ரீஜாவை அழைத்துள்ளனர்.


ஆனால் காலை 6.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு ஸ்ரீஜா போன் செய்துள்ளார். தான் 3 குழந்தைகளை கொன்று விட்டதாகவும், தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது வீட்டுக்குள் போவதற்குள் இத்தகைய துயர சம்பவம் நடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)