கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி ஊராட்சி, மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45). இவரது மனைவி செல்வி (வயது 30). இந்த தம்பதியின் மகன் நித்திஷ் (வயது 13). இவர் திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அதே பகுதி நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

  




இந்நிலையில் குலதெய்வக் கோயிலில் திருவிழாவிற்காக, மருதம்பட்டி காலனியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து நித்திஷ் தங்கி இருந்தார். இந்த நிலையில் தனது தாய், தந்தையிடம் தனக்கு புதிதாக செல்போன் வேண்டும் என்று கேட்டு நித்திஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருகிறோம் என்றும் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சமாதானம் அடையாத நித்திஷ் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில் காலையில் பெற்றோர் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக கரூர் சென்று விட்டனர். நித்திஷ் வீட்டில் இருந்துள்ளார். அண்ணன் திவாகர் (15) அருகிலுள்ள காட்டிற்குச் சென்று விட்டு பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நித்திஷ் வீட்டின் சமையலறை விட்டத்து கம்பியில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.




இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் நித்திஷ் உடலை இறக்கி, பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்திஷின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய பிரியா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)