நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பூவாயம்மாள் திருமண மண்டபம் அருகே வசிப்பவர் அருண் லால். இவர் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி தேவி பிரியா ராசிபுரம் நகராட்சியின் 13வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே இன்று காலை நீண்ட நேரமாக அவரின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். 


அப்போது வீட்டில் அருண் லாலும்,தேவி பிரியாவும்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் இந்த தம்பதியினரின் 18 வயது மகள் மோனிஷா விஷமருந்திய நிலையில் சடலமாக மீட்கபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து 3 பேரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். 


முதற்கட்ட விசாரணையில் நகைக்கடை தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக கடன் சுமையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.