வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் உள்ள புதூர்கொல்லை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் வயது (41). இவர், கடந்த 5 ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கொள்முதல் நிலையம் நடத்தி வருகின்றார்.மேலும் அவர் அப்பகுதியில் திமுக கிளை செயலாளராகவும் இருந்துள்ளார்.  அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வீடு, வீடாகச் சென்று பால் கொள்முதல் செய்து வந்துள்ளார். இதனால் பால் கொள்முதல் செய்து, விற்பனை செய்வதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு விரோதம் வளர்ந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.


 


 




 


இந்நிலையில் வழக்கம்போல்  நாகேஷ், பால் கொள்முதல் நிலையத்தை மூடிவீட்டு வீட்டு அருகே இருப்பதால் நாகேஷ் வீட்டிற்கு நடந்தே  சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமடக்கிய மர்மநபர்கள் நாகேஷை  தாக்கி, கத்தியால் நாகேஷின் கழுத்துப் பகுதியில் வெட்டியள்ளனர். இதில் அலரி துடித்தபடி  ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நாகேஷை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது நாகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நாகேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


 




காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் நாகேஷ் பால் லிட்டர் 26க்கு கொள்முதல் செய்ததும் அதே பகுதியில் வீடு வீடாக 15 ஆண்டுகளாக பால் கொள்முதல் செய்யும் 40 வயது மதிக்கத்தக்க வியாபாரி லிட்டர் 23 ரூபாய் கொள்முதல் செய்ததும் தெரியவந்தது. இதனால் பலர் நாகேஷிடம் பால் விற்று உள்ளனர். இது தொடர்பான தொழில் போட்டியில் கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சந்தேகத்தின் பேரில் நேற்று பால் வியாபாரி உட்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக நாகேஷ் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட நாகேசுக்கு கிரிஜா (37) என்ற மனைவியும், ஹரினி (17) என்ற மகளும், விஜயகுமார் (13) என்ற மகனும் உள்ளனர்.