பொங்கல் திருநாளையொட்டி பிரபல திரைப்படங்கள் நடித்த திரைப்படங்கள் இன்று காஞ்சியில் திரையிடப்பட்டது. அவ்வகையில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் இன்று காலை சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டது.இதனை ஒட்டி திரையரங்கம் நுழைவாயில் இருந்து அவ்வளாக முழுவதும் பிளக்ஸ் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் என அதிக அளவில் காணப்பட்டது.



ஏற்கனவே தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அளித்த நிலையிலும் அதனை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்புகள் எழுந்து வந்தது.இந்நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி பாபு திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு அற்ற முறையில் கட்டப்பட்டு வந்த பேனர்கள் உடனடியாக 4 மணிக்குள் எடுக்க திரையரங்கு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.



அதன் அடிப்படையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திரையரங்க நிர்வாகிகள் தனது ஊழியர்கள் உதவியுடன் பேனர்களை அகற்றி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் இருக்க திரையரங்க வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


 

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

 

துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு திரைப்பட சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 12, 13, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள். ரசிகர்கள் மத்தியில் இரண்டு திரைப்படங்களுக்கும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது




ஒரே நாளில் வெளியீடு:


கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியானதால், பலத்தை நிரூபிக்க விஜய், அஜித்தின் ரசிகர்கள் திரையரங்குகளில் சேட்டையை சேவைபோல் செய்து வருகின்றனர்.




இன்று ( ஜனவரி 11 ) நள்ளிரவில் அஜித் நடிப்பில் வெளியான ’துணிவு’ திரைப்படம் இரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, சில திரையரங்குகளில் இரு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். அதே நேரத்தில் போட்டியாக நினைக்கும் நடிகர்களில் கட் அவுட்களை கிழித்து அட்டகாசமும் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த சம்பவங்களால் பல திரையரங்குகளில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றும் பொங்கல் பண்டிகையையும் கருத்தில்கொண்டும் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.