தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சாவடியூர் கிராமத்தை சேர்ந்த, மோகன் (38), ரகு சகோதரர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் மோகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் தம்பி ரகுவிற்கு (35) திருமணமாகி தீபா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்துடன் தனது அம்மா வீட்டில் வசித்து வருகின்றனர்.


மேலும் தினமும் மோகன், ரகு அண்ணன் தம்பி இருவரும் கூலி வேலைக்கு உள்ளூர் மற்றும் வெளியூருக்கு சென்று வந்துள்ளனர். மேலும் மாலை நேரங்களில் பணி முடித்து வீட்டிற்கு வந்ததும், இரவில் ஒன்றாக மது அருந்தை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இரவு வழக்கம் போல், அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக சேர்ந்து சாவடியூர் தங்களது வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.


அப்போது அண்ணன் மோகன், தம்பி ரகுவிடம், நீ மட்டும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கிறாய். ஆனால் எனக்கு ஏன்? பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அப்போழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்பொழுது தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரகு அருகில் இருந்த கொடுவாளை எடுத்து அண்ணண் மோகனின்  கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மோகன் சம்பவ இடத்திலேயே  இறந்துள்ளார். இதனையடுத்த அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த ரகு, வீட்டுக்கு அருகே உள்ள குப்பை கழிவு கொட்டப்படும் குழியில், குழி தோண்டி மோகனை புதைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் மனைவி தீபாவிடம், அண்ணனை வெட்டி கொன்று புதைத்து விட்டதாக, நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரகு மனைவி, தீபா காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் காவல் துறையினர், வெட்டி புதைக்கப்பட்ட மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதனை தொடர்ந்து மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை மோகனை வெட்டி கொலை செய்து, சடலத்தை குப்பையில் புதைத்த, தம்பி ரகுவை காரிமங்கலம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனையே, தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.