Crime: பவுன்ஸர் டூ கேங்ஸ்டர்? 17 வயது சிறுவன் படுகொலை - யார் இந்த லேடி டான் ஜிக்ரா? மதரீதியான பிரச்னை
Delhi Crime: டெல்லியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாரின் சந்தேகம், லேடி டான் எனப்படும் ஜிக்ரா எனும் பெண்ணின் மீது திரும்பியுள்ளது.

Delhi Crime: சந்தேகிக்கப்படும் ஜிக்ரா முன்னதாக கேங்ஸ்டர் குற்றவாளி ஹாஷிம் பாபாவின் மனைவிக்கு பவுன்சராக பணியாற்றினார்.
சிறுவன் படுகொலை:
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூரில் குணால் எனப்படும் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 'லேடி டான்' என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணிற்கு தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையானது கடந்த வியாழக்கிழமை மாலை நடந்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில் சாஹில் மற்றும் ரெஹான் என்ற இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய நபரான ஜிக்ரா மீது இப்போது கவனம் திரும்பியுள்ளது. கொலை நடந்த இடத்திற்கு அருகே அவர் இருந்தது, அதுதொடர்பாக ஜிக்ராவெளியிட்ட சமூகவலைதள பதிவுகளும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Just In




யார் இந்த ஜிக்ரா?
சிறையில் அடைக்கப்பட்ட ஹாஷிம் பாபாவின் மனைவிக்கு பவுன்சராக பணியாற்றிய ஜிக்ரா, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தும்படியான சமூக ஊடக வீடியோக்களால் அப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர். அவர் அடிக்கடி 10 முதல் 12 நபர்கள் கொண்ட கும்பலுடன் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும், இதனால் அச்சத்தின் சூழ்நிலை உருவாகிறது என்றும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் ஒரு நாட்டுத் துப்பாக்கியை கையில் வைத்திருந்த வீடியோவை வெளியிட்டார். இதனால் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது கொலை செய்யப்பட்ட குணாலின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார்.
வழக்கு விசாரணை?
கொலையில் ஜிக்ராவின் பங்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் கூறினாலும், அவர் விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். அவரது முன்னாள் முதலாளி சோயா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் தனது சொந்த கேங்ஸ்டர் கும்பலை உருவாக்க முயன்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குற்றம் நடந்த இடத்தில் அவர் இருந்ததாகவும், குணாலை முன்பு மிரட்டியதாகவும் குடியிருப்பாளர்களும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர், இருப்பினும் குணாலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
குடும்பத்தினர் சொல்வது என்ன?
ஜிக்ராவின் உறவினர் சாஹில் மீது முன்னதாக சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் குணாலின் பெயரும் அடிபட்டுள்ளது. இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த கொலை அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய குணாலின் தாயார், “அவர்கள் எனது மகனை பலமுறை கொடூரமாக குத்தி கொன்றுள்ளனர். ஆபால், சாஹில் மீதான தாக்குதலில் எனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (VHP) போன்ற இந்து அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, உள்ளூர் காவல்துறை மற்றும் விரைவு நடவடிக்கைப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதரீதியான பிரச்னை?
ஜிக்ராவின் செல்வாக்கு காரணமாக சில குடியிருப்பாளர்கள் அச்சத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. "இந்துக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்" மற்றும் "தயவுசெய்து உதவுங்கள், யோகி ஜி" என்று கூறும் சுவரொட்டிகள் அக்கம் பக்கத்தைச் சுற்றி காணப்பட்டன, பின்னர் அவை போலீசாரால் அகற்றப்பட்டன.
இந்த கொலை மீண்டும் அரசியல் பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது, தலைநகரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதற்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் வடகிழக்கு டெல்லியின் யமுனா பார் பகுதியில் அதிக குற்ற விகிதம் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது. இது பெரும்பாலும் "பாதாள உலகம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அடிக்கடி கும்பல் வன்முறை மற்றும் சிறார்களை உள்ளடக்கிய கொலைகள் அங்கு நிகழ்ந்த வண்ணம் உள்ளன.