நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உளவியல் பிரச்னையால் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் ஏற்படுவதாக மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பவம்தான், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலி ஷர்த்தாவை காதலன் ஆப்தாப், துண்டு துண்டாக வெட்டி கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.


இந்நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள வஜிராபாத்தில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பரை பேப்பர் கட்டரால் கொலை செய்து, அவரது உடலை எரித்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் முனிஷுதீன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர், வஜிராபாத்தில் வசித்து வந்துள்ளார். நண்பரின் மனைவியுடன் முனிஷுதீன் தொடர்பில் இருந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து விரிவாக விவரித்த காவல்துறை, "வஜிராபாத்தின் ராம் காட் முன் எரிந்த உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலில் 90 சதவீதம் தீக்காயம் இருந்தது. 


மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள புதர்களில் ரத்த கறை படிந்திருந்தது.அங்கிருந்து காகிதம் வெட்டும் இயந்திரம் மற்றும் தீப்பெட்டி மீட்கப்பட்டது. பலியானவர் வஜிராபாத் பகுதியைச் சேர்ந்த ரஷித் என அடையாளம் காணப்பட்டது.


அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ரஷீத்துடன் ஒருவர் இருப்பது தெரிந்தது. பின்னர், அவர் முனிஷுதின் என்பது தெரிய வந்தது. அடுத்த நாள் காலை, ரோகிணி செக்டார் 16இல் உள்ள பவானா சாலை அருகே அவர் வருவார் என தகவல் கிடைத்தது. திட்டம் தீட்டி ரஷீத்தை பிடித்தோம்.


முனிஷுதீன் பிளம்பராகவும் ரஷீத் எலக்ட்ரீஷியனாகவும் வேலை செய்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்ல ஆரம்பித்தனர். 


அப்போது, முனிஷுதீனுக்கும் ரஷீத்தின் மனைவிக்கும் இடையே உறவு ஏற்பட்டது. ரஷீத் தனது மனைவியை குடித்துவிட்டு அடிப்பது வழக்கம். இதைத் தொடர்ந்து முனிஷ்தீனும் அந்த பெண்ணும் ரஷித்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 10-15 நாட்களாக ரஷீத்தை ஒழித்துக்கட்டுமாறு முனிஷுதீனை அந்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார். ரஷித்தை கொலை செய்ய இருவரும் சதித்திட்டம் தீட்டினர். அவர்களின் திட்டத்தின் படி, முனிஷ்தீன் ரஷீத்தை ராம் காட் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் மது அருந்தினர். முனிஷ்தீன் போதையில் ரஷித்தை கத்தியால் குத்தினார்.


பின்னர், கழுத்தை அறுத்து, உடலை எரித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலின் அனைத்து ஆதாரங்களையும் அடையாளங்களையும் அழிக்க இருவரும் முயன்றுள்ளனர்"


விசாரணையில், இந்த தகவல்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. நண்பரை பேப்பர் கட்டரால் கொலை செய்து உடலை எரித்த சம்பவம் டெல்லியை உலுக்கி உள்ளது.