தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் பனிமலர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி பரங்கிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தேவி, துணை ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பனிமலர் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

 



 

அப்போது பனிமலரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பனிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பனிமலரின் உறவினர் முத்தரசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பனிமலரை கொலை செய்தது யார் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் பனிமலர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது செல்போன் மூலம் சக திருநங்கைகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 



 

அதில் அவர், என்னை சிலர் கத்தியால் வெட்டுகிறார்கள், முகமெல்லாம் வலிக்கிறது. என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடி கூறி இருந்தார். அதனை கேட்ட சக திருநங்கைகள் நீ எங்கு இருக்கிறாய் என்று பனிமலரிடம் கேட்டனர். அதற்கு அவர், நான் முட்லூரில் இருக்கிறேன். சீக்கிரமாக வந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியபடி செல்போனில் கதறி உள்ளார். அதற்கு சக திருநங்கைகள் நாங்கள் வருகிறோம் என்று கூறினர். பின்னர் மீண்டும் சக திருநங்கைகள் பனிமலரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே சக திருநங்கைகள் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்பு பனிமலர் கொலை செய்யப்பட்டு இருந்தார். 

 



 

 

இரண்டு நாட்களுக்கு முன்பு திருநங்கை பனிமலர் இறந்த நிலையில் தற்பொழுது இந்த செல்போன் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது, மேலும் இந்த செல்போன் ஆடியோவை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மற்ற திருநங்கைகள் கூறுகையில், திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஒரு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.