நகைக்காக மூதாட்டிகளை குறிவைத்து அரங்கேறிய கொலை சம்பவங்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லை பகுதியில் ஒரு மாதத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது. இரண்டு கொலைகளையும் செய்த ஒரே நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னியான் குப்பம் செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு பெண் சடலம் உடல் முழுக்க காயத்துடன் கிடப்பதை கண்ட கிராம மக்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



 

இதனைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த குள்ளஞ்சாவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்தச் சடலம்  புலியூர் பகுதியை  சேர்ந்த இன்பவள்ளி என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது நகைகளை பறித்ததால் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்பவள்ளியின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 இதே போன்று கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி சம்மட்டி குப்பத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் மர்மமான முறையில் ஏரிக்கரை அருகில் உடலில் பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு  செய்து  விசாரணை நடத்தி வந்தனர்.



 

இந்நிலையில், நேற்று முன்தினம் இன்பவள்ளி கொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (23) என்பவரை விசாரணை மேற்கொண்டதில் இன்பவள்ளி மற்றும் மகாலட்சுமி இருவரையும் கொலை செய்தது இவர் என்பதும் நகைக்காக வயதான பெண்களை குறி வைத்தது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லையில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது  அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.