திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே முல்லைவாசல் கிராமத்தில் கோரையாற்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்து ஆற்றில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக உடலை கைப்பற்றி நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம் இவரது மகன் திருமாவளவன் 24. இவர் கும்பகோணம் பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டி வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி அன்று உறவினர் வீட்டு துக்க  நிகழ்ச்சிக்கு கும்பகோணத்துக்கு  குடும்பத்துடன் சென்று வந்த நிலையில், அன்று இரவில் இருந்து திருமாவளவன் வீட்டுக்கு வரவில்லை. வழக்கம்போல் அறுவடை இயந்திரம் ஓட்டும் வேலைக்கு வீட்டில் சொல்லாமல் சென்று விட்டதாக திருமாவளவனின் குடும்பத்தினர் நினைத்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் திருமாவளவனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து, அவரது அறுவடை இயந்திர உரிமையாளரிடம் குடும்பத்தார் விசாரித்துள்ளனர். அதில், திருமாவளவன் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவனின் தந்தை ஆசீர்வாதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது ஒரு புறம் இருக்க, முல்லைவாசல் மதகடி அருகே மணல் லாரியில் மணல் ஏற்றி வந்த நபர்கள், மனித உடல் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் நிகழ்விடத்துக்கு வந்து தோண்டி எடுத்துப் பார்த்ததில் திருமாவளவனின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து நீடாமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இடம் கேட்ட பொழுது இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் விரைவில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்