திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் திண்டிவனம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் ஏஎஸ்பி தணிப்படை போலீசார் சோதனை நடத்தினார். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா மகன் சதாம்(31) என்பவர் அவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.


அவரை கைது செய்த போலீசார் அவர் போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 7 குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரை, 10 ஊசியுடன் கூடிய சிறந்ஜி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சதாமை காவல் நிலையம் அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் சதாம் அளித்த தகவலின் பேரில்  திண்டிவனம் பங்களா தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் சூர்யா(22), கிடங்கல் 2 எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த  செல்வம் மகன் ஷாம் (19), திண்டிவனம் செஞ்சி மெயின் ரோடு மதர் சாய் தெருவை சேர்ந்த பாபு மகன் சிவா (26) ஆகியோருக்கு போதை ஊசி தொடர்ந்து சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.


இதனையடுத்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதை ஊசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சதாம் என்பவருக்கு விற்பனை செய்த மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதில் போதை ஊசி தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால் மேலும் இதில் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


இதேபோல் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே 50 கிராம் கஞ்சா வைத்திருந்த செஞ்சி சாலையை சேர்ந்த காண்டீபன் மகன் கௌதம்(23) மற்றும் திண்டிவனம் என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்த காத்தவராயன் மகன் யுவராஜ்(22), என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரோசணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட ஆலப்பாக்கம் ஏரிக்கரை அருகே 60 கிராம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் விற்ற நத்தமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் விநாயகமூர்த்தி (20), மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கனூர் குளக்கரை அருகே கஞ்சா விற்ற ஏழுமலை மகன் மருதமலை(24), என்பவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.