வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் ஊராட்சி மலையடிவாரத்தில் உள்ள சிறு கிராமம் தேன்கனிமலை. இப்பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன்கள் சேகர் வயது ( 35) ,சாமு வயது (32), இவர்கள் கூலித் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் தனித்தனியே வீடுகளில் அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இவர்களில் சேகரின் மனைவி ராஜேஸ்வரி, கணவனை பிரிந்து மகன் யுகேஷ் (14), மகள் தாட்சாயணி (12) இருவரையும் அழைத்துக்கொண்டு அணைக்கட்டு அருகே மருதவள்ளிப்பாளையத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் சுமார் 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து சேகர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே சமயம் தன்னுடைய தம்பி மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனை ஏற்றகொள்ளாத சேகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அதேபோல் குடும்பத்தினருடன் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்துடன், தம்பி குடும்பத்தினருடன் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் அடிக்கடி தொல்லைகள் கொடுத்து வந்ததால் நிம்மதி இழந்த நிலையில் சாமு குடும்பத்தினர் இருந்து வந்தனர்.


 




இந்த நிலையில் நேற்று  இரவு சேகர், வழக்கம்போல் குடித்துவிட்டு சாமுவின் வீட்டுக்குள் சென்று சாமுவின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து கூச்சல் போட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமு அண்ணன் சேகரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றி சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது வீட்டிற்கு வெளியே சென்ற சேகர் சாமுவை கைகளால் சரமாரியாக தாக்கியபோது வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமு அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து சேகரின் தலை மீது ஓங்கி அடித்துள்ளார். இதனால் தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


 





இதனால் அதிர்ச்சி அடைந்த சாமு, கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்து, தான் சேகரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் கே.ராமமூர்த்தி, கே.வி.குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரி,  உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததனர். மேலும் சாமுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.