சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.


16 வயது சிறுமி:


சென்னை, அம்பத்தூரில் வசித்து வரும் தம்பதி சென்ற மார்ச் 18ஆம் தேதி தங்கள் 16 வயது மகளைக் காணவில்லை என கொரட்டூர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், சிறுமி ஆந்திர மாநிலம், தடாவில் இருப்பதாக முன்னதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.


அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியையும் இளைஞரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் ,தடாவுக்கு தன்னை இளைஞர் காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்றதாகவும் அங்கு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். 


போக்சோவில் கைது:


இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் இளைஞரைக் கைது செய்து விசாரித்தனர். 


அதில் இளைஞர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பதும், திருமணம் செய்வதாகக் கூறி அவரைக் கடத்திச் சென்று இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், விமல்ராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.




போக்சோ சட்டம் : 


16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.


18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)