Crime : மேற்கு வங்கத்தில் வழிப்பறி கொள்ளையர்களால், ஜார்க்கண்ட்  நடிகை சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர் படத்தயாரிப்பாளர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் நேற்று காரில் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.


அப்போது, பக்னன் காவல்நிலையத்திற்குட்பட்ட மகிஷ்ரேகா என்ற இடத்தில் அவர்களது காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள  மறித்தனர். பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதை அடுத்து, அவரது கணவரை ரியா குமாரி மீட்க முயற்சித்தார். 


நடிகை சுட்டுக்கொலை


அப்போது, ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியா குமாரியை அவரது கணவர் காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.  அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, " நடிகை ரியா குமாரி தன் குடும்பத்தினருடன் ஹவுரா நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது, வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் ரியா குமாரியை சுட்டுக் கொலை செய்தனர். மேலும் ரியா குமாரியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருவதாக" தெரிவித்தனர்.


யூடியூபர் தற்கொலை


இதுபோன்று பிரபலங்கள் கொலை செய்யப்படுவதும், தற்கொலை செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்று மற்றொரு சம்பவம் சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் பிரபல பெண் ' யூடியூபர்' தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியைச் சேர்ந்தவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், பி.,காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சமூக வலைதளங்களான 'யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மாடியில் இருந்த தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லீனாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, " லீனாவில் அறையில் சோதனையிட்டபோது தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்து வருகிறோம்.  மேலும், லீனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை” என்று கூறினர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)