வீணா கபூர்


இந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் வீணா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன்  கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. இதையடுத்து உறவினருக்கு போன் செய்த அவர், உடனே விட்டிற்கு சென்ற பார்க்கும்படி கூறினார். இதனை அடுத்து உறவினர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். 


கபூரை கொன்ற மகன்


மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின்  இளைய மகன் சச்சினிடம் போலீசார் அவரது தாய் குறித்து  கேட்டனர். 42 வயதான சச்சினின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. இதனால், அவரிடம் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது, போலீசார் விசாரணைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சச்சின் தனது தாயை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  தனது தாய் என்று கூட பார்க்காமல் பேஸ்பால் பேட் மூலம் தாயை பலமுறை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொத்து தகராறு காரணமாக தனது தாய் வீணா கபூரை கொன்றதாக சச்சின் தெரிவித்தார். இந்த சம்பவம் கூறித்து போலீசார் கூறியதாவது, 'தாயாரின் தலையில் பேஸ்பால் பேட்மூலம் அவர் பலமுறை அடித்துள்ளார். பிறகு யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று, உயிரிழந்த தாயாரின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார். வீட்டில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு காட்டின் அருகிலுள்ள ஆற்றில் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார்.  மும்பை ஜூஹு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் கூறினர்.


பேஸ்பால் பேட்டால் அடித்து கொலை


வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சச்சின் கேட்டுள்ளார். இதற்கு வீணா கபூர் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைய மகன் சச்சின் பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துள்ளார். உயிரிழந்த கபூரின் உடலை பெட்டி ஒன்றில் வைத்துள்ளார்.


பின்பு வீட்டில் வேலை செய்த நபரின் உதவியுடன் காரில் அவரது உடலை எடுத்து காட்டில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வரும் 19ம் தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.