நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி தம்பதியின் மகன் முருகன் (வயது 24). டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகேசன்-பத்மா தம்பதியர். இவர்களின்  மகள் சுமிகா(19). இவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் முருகனும், சுமிகாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே அதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுமிகா ஜனவரி மாதம் 18-ந் தேதி வீட்டிற்கு தெரியாமல் முருகனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதனை ஜனவரி 25 ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சுமிகாவின் தந்தை முருகேசன் தனது மகளை காணவில்லை என்று கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


இதையடுத்து முருகன், சுமிகா இருவரையும் போலீசார் மீட்டு மதுரை ஐகோர்ட்டில் ஒப்படைத்தனர். அப்போது நீதிபதியின் முன்பு சுமிகா தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுமிகாவை கணவருடன் அனுப்பி வைத்தது.  இந்த நிலையில் முருகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தங்களது சொந்த ஊரான ஸ்ரீ ரங்க நாராயணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுமிகாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் பலர் முருகனின் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி சுமிகாவை தர தரவென்று இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் சுமிதாவின் தந்தை முருகேசன், அவரது அம்மா பத்மா, உறவினர்கள் தங்க முத்து, அமுதா, அனுசியா, விஜயகுமார், செல்வகுமார், பாப்பா, தங்கம்மாள், வைகுண்டமணி, பஞ்சு பழம் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.




ஆனால் சுமிகாவின் பெற்றோர் அவரை எங்கு கடத்தி சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் தலைமறைவானவர்களிடம் செல்போன் இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சுமிகாவின் தந்தை முருகேசனுக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பதும் அங்கு முருகேசன் தனது மகளுடன் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு  தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த தனிப்படையினர் சுமிகாவை அவரது பெற்றோர் மற்றும் சித்தி அனுஷியா ஆகியோரது கட்டுப்பாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் சுமிகாவை மீட்டதுடன் அவரது பெற்றோர் உள்பட 3 பேரையும் இன்று கூடங்குளத்திற்கு அழைத்து வந்தனர். இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ராதாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் சுமிகா அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை பெற்றோருடன் செல்ல அனுமதிப்பார்களா? அல்லது கணவருடன் செல்வாரா? என்பது தெரியவரும். காதல் திருமணம் செய்து கொண்ட  நிலையில் பெற்றோரே மகளை  கடத்தி சென்று ஒளித்து வைத்திருந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.