சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில்..

 

மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, அபாயகரமான அரிய வகை விலங்குகள் ஐந்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த விலங்குகளை மீண்டும், மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பினர். அதோடு சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணியை, கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டு எடுத்து வந்தார். சுங்கு அதிகாரிகள் சந்தேகத்தில் அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.

 

தேகு பல்லிகள்

 

இதை அடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனை இட்டனர். அதில் அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு கூடையில், "தேகு லிஸார்ட்" எனப்படும் ராட்ஷச விஷ பல்லி  குட்டிகள் 4 இருந்தன. இந்த ராட்ஷச பல்லி வகைகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளுக்கு வசிப்பவை. இவைகள் ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடிய,விஷ பல்லிகளாகும்.

 

ஒருவகை குள்ள நரி விலங்கு

 

அந்தப் பயணி வைத்திருந்த மற்றொரு கூடையில் "ரக்கூன்" எனப்படும் ஒருவகை குள்ள நரி விலங்கு, ஒன்று இருந்தது. வட அமெரிக்கா வனப்பகுதியில் வசிப்பவை. அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. ஆனால் எடை 5  கிலோவில் இருந்து 26 கிலோ வரை இருக்கும். இது கொடூரமாக தாக்கும் தன்மையுடையது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர்  அதோடு அவர் வைத்திருந்த அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகளையும் பறிமுதல் செய்தனர்.

 

விலங்குகளை கடத்தி வந்து..

 

மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்வையிட்டுவிட்டு, இவைகள் ஐந்துமே மிகவும் ஆபத்தான வனவிலங்குகள். மேலும் நோய்க்கிருமிகள் அதிகமாக இருக்கக் கூடியவை. இதனால் இந்த விலங்குகளை நம் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது. இந்த விலங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த அந்தப் பயணியை கைது செய்வதோடு, இந்த விலங்குகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை, விலங்குகளை கடத்தி வந்து கைது செய்யப்பட்டுள்ள பயணியிடம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்துனர்.

 

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அபாயகரமான இந்த விலங்குகளை மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்தனர். அதன்பின்பு இந்த ஐந்து விலங்குகளையும் இன்று மதியம் சென்னையில் இருந்து  கோலாலம்பூர் சென்ற, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகளும் ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.