ஆன்லைன் மூலமாக அறிமுகம்

 

சென்னை அடுத்த தாம்பரம்  முடிச்சூர் பகுதியில் வசித்து வரும் 35-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தன் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து வரன் பார்க்கும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இவரது ப்ரொஃபைலை பார்த்து ஜூன் மாதம் ஒரு நபர் தொடர்புகொண்டு தனது பெயர் ஹபீப் ரஹ்மான், என்றும் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தனது மனைவி இறந்து விட்டதாகவும், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருவதாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரன் பார்க்கும் போது உங்களது ப்ரொபைல் பார்த்து தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.

 



விலை உயர்ந்த காரில்..

 

சம்பந்தப்பட்ட நபர் அப்பெண்ணிடம் சுமார் மூன்று நான்கு முறை தொலைபேசியில் பேசியுள்ளார். இதனை அடுத்து, நம்பத் தகுந்த ஆதாரங்களை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து திருமணம், பற்றி பேசுவதற்காக சம்பந்தப்பட்ட நபரை  நேரில் வர அழைத்துள்ளார். அப்பொழுது உயர்தர சொகுசு காரில் வந்திறங்கி அந்த பெண்ணுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். அப்போது தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும், அண்ணன் கனடாவில் வசித்து வருவதாகவும், அதேபோல் தான் அக்காவும் வெளிநாட்டு ஒன்றில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் .

 

விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்..

 

தொடர்ந்து அப்பெண்ணுடன்  நெருக்கமாக பழகி வந்துள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், தனது அக்கா வருகின்ற ஜூலை மாதம் சென்னைக்கு வருவதால் அப்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனவும் பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து வந்துள்ளார். பின்னர் சில நாட்கள் நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும், இரண்டு நாட்களில் தந்து விடுவதாக கூறியதும் உடனே அந்த பெண் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார்.

 

பின்னர் 5 நாட்கள் கழித்து, தாம்பரம் கிஷ்கிந்தா பக்கத்தில் தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம்  இருப்பதாகவும், அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் தேவைப்படுவதாகவும் நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து நம் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியதும், வருங்கால கணவர் தானே என்று நினைத்து 10,லட்சம் பணத்தை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

 

36 லட்சம் வரை மோசடி..

 

பின்னர் பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக  36 லட்சம் ரூபாய்  மற்றும் 13 சவரன் தங்க நகையை வாங்கிக்கொண்டு ஹபீப் ரஹ்மான் சென்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜில் பணம் கொடுத்ததற்கு நன்றி பணத்தை திருப்பித் தருவதாக கூறி பாய் சொல்லிவிட்டு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.



பின்னர் மூன்று மாதமாக பல இடங்களில் ஹபீப் ரஹ்மானை தேடி அவர் கிடைக்காததால், தாம்பரம் உதவி கமிஷனர் சிபி சக்கரவர்த்திடம் சென்று ஹபீப் ரஹ்மான் என்ற நபர் தன்னை ஏமாற்றி பணம் மற்றும் நகை வாங்கிக் கொண்டு சென்றதாக கூறி புகார் அளித்துள்ளார். உடனே ஹபீப் ரஹ்மானை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் அவரது மனைவியுடன் இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் உடனடியாக சென்று சுற்றி வளைத்த அவரை கைது செய்தனர்.

 

கோவாவில் சொகுசு வாழ்க்கை...

 

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இருப்பதால் ஹபீப் ரஹ்மானை பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.  அதன் பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்கள் கணவன் இழந்தவர்களை குறி வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. வெப் சைட் மூலமாக பணம் கட்டி அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் நூதன முறையில் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. 



 

அவ்வாறு ஏமாற்றிய பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச், கார், இரண்டு சவரன் தங்க நகை மட்டுமே பறிமுதல் செய்தனர். பின்னர் ஹபீப் ரஹ்மானிடம் 36 லட்சம் பணத்தைக் குறித்து கேட்டபோது, செலவு செய்துவிட்டதாக  காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.