ஹரியான மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர் ரவிகாந்த் லஷ்மணன் ராவ் ஜாரங். இவர் இந்திய அளவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவிகாந்த் லஷ்மணன்ராவ் ஜாரங் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சீத்தாராமன் வயது (32) என்பவர் தங்கள் நிறுவனத்தோடு இணைந்து இடைதரகராக வியாபாரம் செய்ய ஆன்லைன் மூலம் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்து இணைந்துள்ளதாகவும், பிறகு ஏப்ரல் மாதம் வரை சுமார் 2 கோடி வரை வியாபாரம் செய்துள்ளார்.   மேலும் வியாபாரத்தை தொடர ஒரு கோடியே 80 லட்சத்தை பெற்றுக்கொண்டு நீண்ட நாள் ஆகியும் பொருட்களை வழங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைகழித்தார்.  இதுநாள் வரை 70 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளார்‌. மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


 




இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் A1 குற்றவாளியான சீதாராமன் என்பவர், மேலும் சிலர் இத்தொழிலில்  ஈடுபடுவதாக கூறி அவர்களை இணைத்துள்ளார். அதில் குடியாத்தத்தை சேர்ந்த சத்தீஷ்குமார், வசந்தகுமார், அகரம் சேரியை சேர்ந்த சரவணன் ஆசை தம்பி ஆகிய 3 பேருக்கு சீதாராமனே புதியதாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சத்தை பெற்றுள்ளார்.  இதில் 70 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டு மற்ற பணத்திற்கு போலியான ஆவணம் மற்றும் பில்லை தயாரித்து அந்நிறுவனத்தில் வழங்கியுள்ளார். இம்மூவரின் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் தனது மனைவி விஜிதா வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். 




இப்படி மோசடி செய்த பணத்தில் சீதாராமன் புதியதாக ஒரு பென்ஸ் கார், ஒரு டிராவல் வேன், அகரம் சேரியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோடு  ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் பெங்களூருவில் இருந்து பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மொத்த பணமும் செலவான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது மனைவி விஜிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அறுவை சிகிச்சைக்காக தன்னிடம் உள்ள ட்ராவல் வாகனத்தை அடமானம் வைத்து பணத்தை மருத்துவமனையில் கட்டி உள்ளார். 




 


இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்த மோசடி பேர்வழி சீதா ராமனை கைது செய்த மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள்,  அவரது கூட்டாளிகளான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களை விசாரணைக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள குடியாத்தத்தை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சரண்ராஜ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து புலன் விசாரணை மேற்கொண்டு சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.