Crime: கோவையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல் - 6 பேர் கைது

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டிப்பாளையம் என்ற பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்  அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Continues below advertisement

உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்

அப்போது தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது, சுமார் 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஆஷ்மா கா துன் (40), ஜஹீரா கா துன்(29), இத்ரிஷ் அலி(29), குதிஜா கா துன்(37) , அலி ஹீசைன் (48)  மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து உயர் ரக போதை பொருட்களை கடத்தி வந்து, தொண்டாமுத்தூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல் துறை‌யின‌ர் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

காவல் துறையினர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், இந்தாண்டில் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 54.160 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola