கோவை வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு - லாவண்யா தம்பதி. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்குப் 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகன் மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் 5 வயது மகன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரபு காளப்பநாயக்கன்பாளையம் பிரிவில் லேத் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்து உள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கவுண்டம்பாளையத்தில் செந்தில் என்பவரின் லேத் ஒர்க் ஷாப்பிற்கு வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் பிரபு வீட்டில் இருந்து வந்து உள்ளார். பிரபுவின் மனைவி லாவண்யா கே.என்.ஜி புதூரில் பேக்கரி மற்றும் உணவகத்தை கடந்த 9 மாதமாக நடத்தி வருகிறார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த பைரே கவுடா என்பவர் லாவண்யா நடத்தி வரும் டீ கடைக்கு அருகே உள்ள எல்&டி பைப் கம்பெனியில் ஓட்டுனராக பணி புரிந்து வந்து உள்ளார்.


கொலை முயற்சி


இந்நிலையில் அடிக்கடி லாவண்யாவின் கடைக்கு டீ மற்றும் டிபன் சாப்பிட வந்த போது, லாவண்யாவுடன் பைரே கவுடாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால் உணவகத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பைரே கவுடாவும், லாவண்யாவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, கணவட் பிரபு உயிருடன் இருப்பது இடையூறாக உள்ளதாக கருதி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடையர்பாளையம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் நகரில் ஸ்டேஷனரி கடையில் எலி பேஸ்ட் 3 வாங்கிக் லாவண்யாவிடம் கொடுத்து உள்ளார். அதை எடுத்துச் சென்ற லாவண்யா அவரது கணவரான பிரபுக்கு எலி பேஸ்ட் ஒன்றை சாம்பாரில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதில் பிரபு இறக்காமல் உயிர்த்தப்பினார்.  


கழுத்தை இறுக்கி கொலை


இதன் காரணமாக வயிற்று வலியால் கடந்த 10 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று லாவண்யா தொலைபேசி மூலம் பைரே கவுடாவிற்கு வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை கூறி உள்ளார். பிற்பகல் பைரே கவுடா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் பிரபுவின் வீட்டிற்கு சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற அவர் மேல் அறையில் படுத்து இருந்த பிரபுவை அறையில் இருந்த காட்டன் துண்டு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார். கொலை செய்த பின் பிரேதத்தை பெட்ஷீட்டில் மூடிய பின் லாவண்யாவுக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். தகவலை அறிந்த லாவண்யா அடுத்த 15 நிமிடத்தில் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார்.


காவல் துறையினர் விசாரணை


வீட்டிற்கு வரும் பொழுது பைரே கவுடாவும் இருந்து உள்ளார். நீ உடனே புறப்பட்டு செல் நான் பார்த்துக் கொள்கிறேன் என பைரே கவுடாவிடம் கூறி உள்ளார். பின்பு தனது கணவர் உடல் அசைவின்றி இருப்பதாக தனது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் இறந்த பிரபுவின் உடலை எடுத்துக் கொண்டு ஆட்டோ மூலம் இடையர்பாளையத்தில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்து உள்ளனர். தனியார் ஆம்புலன்ஸ்  மூலம் பிரபுவின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து வடவள்ளி காவல் துறையினருக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணையில் லாவண்யா, பைரே கவுடா உடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.