சென்னை அண்ணனூர்  பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த் வயது 35 இவர் அவரது பாட்டி பாப்பம்மா என்பவரை பார்ப்பதற்காக இரு தினங்களுக்கு முன்பு பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் ஜி.கே.எம் காலனி 30 வது தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து கிருஷ்ணகாந்தை சரமாரியாக வெட்டினர். இதில் கிருஷ்ணகாந்த் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

 



 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரவள்ளூர்  ஜி.கே.எம் காலனி பகுதியை சேர்ந்த வெள்ளை (எ) மொபசீர் (30), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) ஹரிகரன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில வெட்டுப்பட்ட கிருஷ்ணகாந்துக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே  ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகாந்த் அவரது பாட்டி வீட்டிற்கு வருவதை முன்கூட்டியே அறிந்தவர்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



இளைஞரை கொலை செய்ய கத்தியுடன் சுற்றிய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது



 

சென்னை திரு.வி.க நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜானகிராமன் தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருவிழாவில் சில இளைஞர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக   போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திரு.வி.க நகர் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமான நான்கு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த முரளி வயது (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் என நான்கு பேரையும் கைது செய்தனர்.

 



 

இவர்களிடம் இருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் திருவிழாவில் கலந்து கொண்ட 15 வயது சிறுவனை சாமி ஊர்வலத்தின் போது தேவராஜ் என்ற நபர்  தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்க சிறுவன் மற்ற மூன்று நபர்களையும் அழைத்துக் கொண்டு அவரை வெட்ட சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முரளி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.