சென்னை  குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் வசிப்பவர் ஆறுமுகம் ( வயது 45). இவர் குரோம்பேட்டை பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 40). இவர் கணவர் செய்யும் ஊர் வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும்,  ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் 1 முதல் குறுக்கு தெருவில், சமீபத்தில் குடியேறி வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

 



ஆறுமுகத்தின் பெரிய மகள், தற்பொழுது இவர் தங்கி உள்ள பகுதியில் அருகிலேயே வசித்து வருகின்றனர். தினமும் ஆறுமுகம் மகள் வீட்டிற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆறுமுகம் , பெரிய மகள் வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து பெரிய மகள் ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி இருவரின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டபொழுது , தொலைபேசி எடுக்காமலும் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பெரிய மகள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது தாய் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.



 

கதவு திறக்காததால் சந்தேகமடைந்து கதவு உடைத்து பார்த்தபோது வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்தறுபட்டு இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கபட்டு விரைந்து வந்த காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இரட்டை கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக இந்த இரண்டு கொலைகளும் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. நகை மற்றும் பணம் உள்ளிட்ட காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா, என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.