சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிக்கடி காலணிகள் திருடப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் ஒருவரது வீட்டில் காலணிகள் திருடு போயின. அதனால் வீட்டின் உரிமையாளர் குடியிருப்பு பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தப்போது, ஒருவர் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வந்து காலணிகளை திருடி சென்றிருப்பது பதிவாகியிருந்தது.

 

இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இந்த புகாரில் கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் காலணிகளை திருடியது விகாஸ் குமார், ரோஹித் குமார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அருள் எப்ரின் என்பது தெரிய வந்தது. 

 

இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட தகவலில், மூன்று பேரும் குடியிருப்பு பகுதிகளில் காலணிகளை திருடி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று பேரும் பழைய சிறப்புகளை திருடி அதில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் செருப்புகளை தரம் பிரித்து, அவற்றை தண்ணீரில் சுத்தம் செய்து பார்ப்பதற்கு ஓரளவு வெளி தோற்றம் உள்ள செருப்புகளை பல்லாவரம் வார சந்தையில் வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.