செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மீனவக் குப்பத்தைச் சேர்ந்த 14வயதுடைய கஜா சுபா நித்ரா மகாபலிபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற 9ம் வகுப்பு மாணவி கஜா சுபா நித்ரா பள்ளியில் நடைபெற்ற பருவ தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிய மாணவியை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் பெற்றோரிடத்திலும்  பேசப்போவதாக ஆசிரியர் தெரிவித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். 



 

எங்கே ஆசிரியர் தன் பெற்றோரிடத்தில் தன்னை பற்றி ஏதேனும் கூறி அதனால் ஏற்படும் எதிர் வினைகளின் பயத்தினாலும் ,மன உளைச்சல் காரணமாகவும் அப்பள்ளி மாணவி திடீரென தான் பயிலும் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மாணவியின் இடுப்பு விலா எலும்பு முறிவு ஏற்பட்டு கை, கால்களில் கடுமையாக படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.



 

இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர்கள் உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு பள்ளி அருகாமையிலுள்ள விபத்து பிரிவு மருத்துவமனையில் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அம்மாணவி அனுமதிக்கப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகிறார்.



 

மேலும் இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலை முயற்சி  குறித்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே நடந்த பள்ளி மாணவியின் இந்த தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து  குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியரிடம் செங்கல்பட்டு நீதிபதி நேரில் சென்று வாக்குமூலங்களை வாங்கினார். இதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 

மேலும் இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கேட்டபோது தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 



 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கள்ளக்குறிச்சி  சம்பவம், நேற்று வேலூர் பள்ளி மாணவி ,காஞ்சிபுரம் தனியார் பள்ளி மாணவன் என பள்ளி மாணவர்களின் தற்கொலை முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும்,மன வேதனையடைய செய்துள்ளது.

 




 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .