இன்ஸ்டாகிராம்

 

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் , சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து, திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மேக்கப் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோக்களை பதிவேற்றம், செய்து வந்த மேடை நாடக கலைஞர் ராகுல் சிராஜ் என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதால், தொடர்ந்து நட்பாக பழகி வந்துள்ளனர். 



 

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்த இருவரும் பழகத் தொடங்கிய பொழுது இருவரும் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி நேரிலும் சந்தித்து வந்துள்ளனர். நாளடைவில் இருவரின் நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

 

தொழில் தொடங்குவதாக கூறி 

 

மேலும் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிராஜ் நம்பவைத்ததோடு, இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் எனவும், தனக்குத் தெரிந்த நபர்கள் மூலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் மேக்கப் ஆர்டர்களை எடுக்கலாம் எனவும் சிராஜ் கூறியுள்ளாராம். இதனையடுத்து தொழில் தொடங்குவதாக கூறி சிராஜ் சிறுக சிறுக ரூ.10 லட்சம் பணம், கார் என அந்த பெண்ணிடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.



 

அதிகளவில் இளம்பெண் பணம் செலவு செய்ததால் சந்தேகமடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது, காதலனுக்காக செலவு செய்வதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். முதலில் பெற்றோர் எதிர்ப்புத்தெரிவித்த நிலையில், பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிராஜ் இளம்பெண்ணுடன் உரையாடுவதைத் தவிர்த்து வந்த நிலையில், பின்னர் திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் இளம்பெண், பல முறை சிராஜிடம் கேட்டபோதும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் எனத் தவிர்த்து வந்துள்ளார். தன்னை பணத்திற்காகவே சிராஜ் பயன்படுத்துவதை தெரிந்து கொண்ட, அப்பெண், உடனடியாக இது குறித்து கிண்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



 

காவல் நிலையத்தில் புகார்

 

இளம் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிராஜை  நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிராஜ் மீது பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ராகுல் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.