குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மனைவி கட்டிய தூக்கு கயிற்றில் மனைவிக்கு பதிலாக கணவன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், போலீஸ் கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் 28 வயதான மகாராஜா. இவர், வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண் டார். ஜீவா தற்போது கர்ப்பமாக உள்ளார். மகாராஜா தனிப்படையில் பணியாற்றி வருகிறார். திருவான்மியூரில் பிரபல ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மகாராஜா சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் வெகு நேரம் வரை மகாராஜா வீட்டிற்கு வரவில்லை.


கர்ப்பமாக உள்ள ஜீவா தனது கணவர் வீட்டிற்கு வராததால் போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். பிறகு ஒரு வழியாக மகாராஜா வீட்டிற்கு வந்ததும், கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜீவா தனது காதல் கணவனை மிரட்டும் வகையில் மின் விசிறியில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதை பார்த்த மகாராஜா தனது மனைவியை மீட்டு சமாதானம் செய்தார். ஆனால் ஜீவா சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது.


உடனே காவலர் மகாராஜா 'நீ தான் தற்கொலை செய்து கொள்வாயா... நான் செய்ய மாட்டேனா' என்று கூறி மனைவி கட்டி வைத்திருந்த தூக்கு கயிற்றை விளையாட்டாக தன் கழுத்தில் மாட்டியுள்ளார். திடீரென மகாராஜா கழுத்தில் கயிறு இறுக தொடங்கியுள்ளார். இதனால் காவலர் மகாராஜா வலியில் துடித்துள்ளார். பிறகு தனது கணவனை மகாராவை ஜீவா மீட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் மகாராஜா நலமாக உள்ளார். இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மிரட்ட விளையாட்டாக தூக்கு கயிறு கட்ட போய் அதுவே வினையாக மாறி கணவன் உயிரை பறிக்க முயன்ற சம்பவம் காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.