தமிழ்நாட்டில் சமீப காலமாக பேருந்துகளில் ஆபத்தான முறையில் , கல்லூரி  மற்றும் பள்ளி மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி,  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவப்பொழுது இதுகுறித்து காவல்துறையினர், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இது போன்ற மாணவர்கள் தொங்கி சென்ற பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ஒரு பள்ளி மாணவன் கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



படியில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவன்

 

 

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று கேளம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் (MTC) முன்பக்கப் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்து கொண்டிருந்த மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ஆவது வகுப்பு மாணவர் யுவராஜ், கண்டிகை என்ற இடத்தில் படிக்கட்டுகளில் இருந்து  தவறி விழுந்தார். அதே பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாழம்பூர் காவல்துறையினர், உயிரிழந்த மாணவன் உடலை கைப்பற்றி குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

மற்றொரு சம்பவம்

 

அதேபோல், கடந்த 26-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் சென்று மாநகரப் பேருந்தில் முன்பக்க படிகளில் தொங்கியவாறு பயணம் செய்த, ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த,  இந்துஸ்தான் கல்லூரி மாணவர் சஞ்சய், படியிலிருந்து தவறி விழுந்து, பின்பக்க சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்தும் ஓட்டேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரே வழித்தடத்தில் இரண்டு விபத்துக்கள்

 

இரண்டு நாட்களுக்குள் ஒரே வழித்தடத்தில் இரு வேறு விபத்துகளில் படியில் தொங்கிச் சென்ற பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செயல்படும் நேரங்களில் அதிக அளவு அரசு பேருந்துகளை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. அதிகளவு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் ஒரே பேருந்தில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதால் மாணவர்கள் சிலர் படியில் தொங்கிக் கொண்டு செல்வதாகவும், இதனால் அரசு அதிகளவு பேருந்து இயக்கினால், இது போன்ற சம்பவங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.