ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார் (35). இவர் தனது மனைவி மற்றும் ஒரு மாத ஆண் குழந்தையுடன் சென்னை கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கொத்தனாராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஹேமந்த்குமாரும் அவரது மனைவியும் அடுக்குமாடி குடியிருப்புக்கு, அருகிலேயே அவர்களுக்காக போடப்பட்டிருக்கும் குடிலில் குழந்தையை வைத்துவிட்டு அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். பின் குடிலில் வந்து பார்த்தபோது ஒரு மாத ஆண் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹேமந்த் குமார் மற்றும் அவரது மனைவி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது குழந்தையை மீட்டுத் தரக்கோரி சரியாக காலை 10 மணியளவில் புகார் அளித்தனர்.



உடனடி நடவடிக்கை

 

சம்பவ இடம் விரைந்த கேளம்பாக்கம் போலீசார் குடியிருப்புக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு நபர்கள் குழந்தையை தூக்கிச்செல்வது தெரியவந்தது. குழந்தையின் புகைப்படங்கள் இல்லாததால் அருகாமையில் இருக்கக்கூடிய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குழந்தை குறித்த அடையாளங்களுடன் தகவல் தெரிவிக்கப்பட்டது.



 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தம்பதிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு கேளம்பாக்கம் போலீசார் தகவல் அளித்தனர். உடனடியாக சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும் சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே போலீசாரும் இணைந்து ரயில் நிலையம் முழுவதும் குழந்தையை கடத்தி வந்த இருவரையும் தீவிரமாக தேடினர்.

 

சென்னை சென்ட்ரல்

 

பிளாட்பாரங்களில் புறப்பட தயாராக இருந்த அனைத்து ரயில்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளாட்பாரம் எண் 9- ல் புறப்பட தயாராக லால்பாக் மைசூர் விரைவு ரயிலில் போலீசார் தேடினர். அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஒரு மாத கைக்குழந்தையுடன் இருப்பதை கண்டனர்.



ஐந்து மணி நேரத்தில் மீட்பு

 

காவல்துறை நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது இருவரும் கேளம்பாக்கத்தில் இருந்து குழந்தையை கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சு (34) மற்றும் கோமலா (28) என்பதும் கணவன் மனைவியான இருவரும் குழந்தையை பெங்களூர் கடத்திசெல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கேளம்பாக்கம் போலீசார் குழந்தையின் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு வந்தனர்.

 

 5 மணி நேரத்தில் புகைப்படமே இல்லாமல் கடத்தப்பட்ட குழந்தையை சாதுர்யமாக மீட்ட கேளம்பாக்கம் போலீசார், சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே போலீசார், சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.