இலங்கையிலிருந்து சென்னைக்கு, இரண்டு விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ. 73 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கப்பசை, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை பெண் பயணி உட்பட 2  பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு

 

இலங்கை நாட்டு தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் உடமைகளை முழுமையாக சோதனை இட்டனர்.

 

6  பிளாஸ்டிக் பவுச்சிகள்

 

அவருடைய கைப்பைக்குள் 6  பிளாஸ்டிக் பவுச்சிகள் இருந்தன. அதை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்த போது, தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 6  பவுச்சிகளிலும் 725 கிராம் தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 37.25 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

 

தங்க பசை பறிமுதல்

 

இந்த நிலையில் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான  நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்த போது, சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி  ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதித்த போது, அவருடைய உள்ளடைக்குள் 2  பார்சல்கள் மறைத்து வைத்து இருந்தார். அதில் 700 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 36 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், தங்கப் பசையை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.

 

இரண்டு பேரை கைது செய்து விசாரணை

 

இலங்கையில் இருந்து சென்னை வந்த 2  விமானங்களில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 73  லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ 420  கிராம் தங்கப் பசையை பறிமுதல் செய்து, இலங்கை பெண் பயணி உட்பட இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.