செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 30). இவருடைய மனைவி அஞ்சலி (வயது 22). சின்னத்தம்பி மற்றும் அஞ்சலி தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.  இவர்களுடன் சின்னத்தம்பியின் மாமியார் வசந்தா வசித்து வருகிறார் (வயது 42). மூவருக்கும் குடிப்பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள், வேலை முடிந்த பிறகு மூவரும் இணைந்து குடிப்பதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.



 

இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல மூவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர். இந்த நிலையில் அதிக அளவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று காலையும் மது அருந்தியதாக தெரிகிறது, இந்த நிலையில் மதியம் வரை தொடர்ந்து போதையில் இருந்ததாக பகுதி மக்கள் கருதி உள்ளனர். ஆனால் நீண்ட நேரம் போதையில் இருக்க வாய்ப்பில்லை என மதியம் சென்று பார்த்த பொழுது, சின்னதம்பி மற்றும் அவரது மாமியார் வசந்தா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து அஞ்சலை கவலைக்கிடமாக இருந்து வந்துள்ளார். 

 



இதுகுறித்து தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, அஞ்சலியை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வசந்தா மற்றும் சின்ன தம்பி ஆகிய உடல்களை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து அஞ்சலை இடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஞ்சலி அதிக அளவு மது அருந்ததியதாக கூறினாலும், முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால், காவல்துறையினர் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.