செங்கல்பட்டு அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறிய இளைஞரை செங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சரவெடி பட்டாசுகளை வெடித்ததாக

 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு , கடந்த 18ஆம் தேதி இரவு வெகு விமர்சையாக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது பொத்தேரி விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் ஹேமநாதன் என்பவரது வீட்டின் முன், அங்குள்ள இளைஞர்கள் சரவெடி பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஹேமநாதன் தனது வீட்டில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், சரவெடி பட்டாசுகளை கொஞ்சம் தள்ளி வெடிக்குமாறு அந்த இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார் .

 

சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து

 

இதன் காரணமாக அந்த இளைஞர்களுக்கும் ஹேமநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதனை நேரில் கண்ட அவரது உறவினர் கார்த்திக் வயது(24) என்பவர் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கற்களை கொண்டு கார்த்திகை பலமாக தாக்கியுள்ளனர்.

 

8 பேர் மீது புகார் 

 

இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் ஹேமநாதன் 8 பேர் மீது புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாகியுள்ள  சிவா, ராகேஷ், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைத்தனர். 

 

உடலை வாங்க மறுத்து

 

இந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த பகுதியில் அவ்வப்பொழுது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனை ஏற்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் முறையாக போலீசார் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காதது , இந்த பிரச்சனைக்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்தநிலையில் உயிரிழந்த கார்த்தியின் உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் மற்றும் ஒரு கார்த்தியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.