செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் எதிரே உள்ள கார் பார்க்கிங் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி அருகில் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியில் அதீத  துர்நாற்றம் வீசி உள்ளது. சந்தேகம் அடைந்து கழிவுநீர் தொட்டியை பார்த்த பொழுது அதில் சடலம் இருப்பதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு  மற்றும் காவல்துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரம் கொண்டு கழிவுநீர் தொட்டியில், அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது செல்கிறார்களா என்பது குறித்த தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அதேபோல சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பொது மக்களிடமும், சம்பவம் நடந்த இடத்தில் அருகே இருந்த டாஸ்மார்க் பகுதிகளிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.




இவ்வழக்கில் திடீர் திருப்பமாக காவல்துறையினருக்கு சில சாட்சியங்கள் கிடைத்தது. அதில் சிசிடிவி காட்சி அடிப்படைகளும் மற்றும் பொதுமக்கள் சிலர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ரசனா கார்த்திக் (25) சங்கர் (26), சரவணன் (28) மணி (22) ஆகியோரை கைது கழிவுநீர் தொட்டியில் இருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் மது வாங்க செல்லும் போது இருசக்கர வாகனத்தை கொண்டு உரசியதால் ஆத்திரமடைந்து கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி விட்டோம் என பிடிபட்ட கைதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.




கொலை செய்தவர்கள் யார் என காவல்துறையினர் கண்டுபிடித்தாலும் கொலையான நபர் யார் என தெரியாமல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.  சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அனுமந்தபுரம் அடுத்துள்ள பட்டரவாக்கம் பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரின் மகன் ராஜ் என காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தற்பொழுது நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர