திருமணம் ஆன சகோதரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்ததால் கொலை செய்ததாக தம்பி வாக்குமூலம்.

 

நல்லிரவில் நடைபெற்ற கொடூர கொலை

 

திருக்கழுக்குன்றம் ( thirukazhukundram ) : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் திருநாவுக்கரசு /28.  இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்து தண்டரை பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து அவருடைய நிறுவனத்தின் பேருந்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் தண்டரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று மீண்டும் நள்ளிரவில் தனது, இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், கிராம நிர்வாக அலுவலகம் அருகே மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார் .

 

திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை ( thirukazhukundram police station )

 

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றிய  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருநாவுக்கரசுக்கு திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வரக்கூடிய, திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஒன்றாக இருப்பதை அந்தப் பெண்ணின் தம்பி மணிகண்டன் (22) நேரில் பார்த்து இருவரையும் பலமுறை எச்சரித்து உள்ளார். இதுபோக மணிகண்டனின் நண்பர்களும் மணிகண்டனின் அக்கா தவறான செயலில் ஈடுபடுவது குறித்து அவ்வப்பொழுது அவரிடம் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மணிகண்டன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

 

வாக்குமூலம் 

 

இதுகுறித்து திருநாவுக்கரசை பலமுறை எச்சரித்தும்,  இதைப் பொருட்படுத்தாத திருநாவுக்கரசு அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வருவதை பார்த்த மணிகண்டன் அவனது நண்பன் குமார் (27) உடன் இணைந்து திட்டம் தீட்டி நள்ளிரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருநாவுக்கரசை வழிமறித்து வெட்டி கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகியோரை கைது செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.