செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் ஆயிரம் ரூபாயை பறித்து, கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


காவல்துறை உங்கள் நண்பன்


காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனக் கூறுவார்கள். ஏனென்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் வந்து நிற்பது காவல்துறை நல்ல விஷயமாக இருந்தாலும், கெட்டது நடந்தாலும் பாதுகாப்பிற்காக ஓடோடி வரும் ஒரு துறை என்றால் அது காவல்துறை. ஆனால் காவல்துறைக்கு களங்கம் கற்பிப்பது காவல்துறை சார்ந்த செய்யும் நபர்களாலே ஏற்பட்டு விடுகிறது. மோசமான ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல் துறை மீது களங்கம் ஏற்பட்டு விடுகிறது .


காவலர் செய்த செயல்


அந்த வகையில் காவலர் ஒருவர் செய்த மிக மோசமான செயல் காவல்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தில் ஜப்பான் சிட்டி தொழில் பேட்டை இயங்கி வருகிறது. அதில் ஏராளமான ஜப்பான் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் உள்ளூர் மக்களை விட மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதே இடத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.


காவலர் அஜித்குமார் 


தொழிலாளர்கள் காய்கறி அரிசி பருப்பு, போன்ற அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு அந்நிறுவனமே திருப்போரூர் வரை பேருந்து அனுப்பி அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் வரை காத்திருந்து மீண்டும் அழைத்துச் செல்வன் செல்கின்றனர்.  அப்படி இருக்கையில் நேற்று இரவு திருப்போரூர் அருகே மானாமதி காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர் அஜித்குமார் (வயது 34) என்ற காவலர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 


அப்பொழுது, சாலை ஓரமாக சில வட மாநில தொழிலாளர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்ற காவலர், அஜித்குமார் சிகரெட் பொது இடத்தில் பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.‌ தொடர்ந்து அதிகாரத் தோணியில், வடமாநில நபரை  அடித்து துன்புறுத்தி அராஜக முறையில் வலுக்கட்டாயமாக ஒருவரிடம் ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 


போலீசை கைது செய்த போலீஸ்


இதுகுறித்து அந்த தொழிலாளிகள் காவலர் நடந்து கொண்ட சம்பவம் குறித்து தாங்கள் பணிபுரியும்  நிறுவன மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சார்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை அடிப்படையில்  வட மாநில தொழிலாளர்களை தாக்கி மானாமதி காவல் நிலைய காவலர் அஜித்குமார் ஆயிரம் ரூபாய் பணம் பறித்துச் சென்றது உண்மை என தெரிய வந்தது.


இதை அடுத்து   நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மானாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தவறு செய்பவர்களை தட்டி கேட்டு நீதி வாங்கித் தர வேண்டிய காவலர் ஒருவர், எல்லை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .