செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி உட்பட்ட அனுமந்தபுத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த எஸ் வி தாமோதரன் (60). இவர் (செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற இளநிலை நிர்வாக அலுவலர்). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவி ஆண்டாள் (53) மற்றும் மகன் ஷாம் (34) உடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று வீடு திரும்பி உள்ளார்



இந்நிலையில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பிய எஸ்.வி.தாமோதரன் பூட்டை உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தவுடன் வீட்டின் உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 60 சவரன் தங்க நகைகளையும் சுமார் 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களையும் மர்மநபர்களால் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.



இதனை அடுத்து தாமோதரன் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்த ஆதாரங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சம்பந்தப்பட்ட நபர்கள் கோவிலுக்கு சென்று உள்ளனர். அன்று நள்ளிரவே இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக அந்த தெருவில் சுற்றி தெரியும் சிசிடிவி காட்சிகளை, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வீட்டின் முன் வாசல் வழியாக எகிறி குதித்து வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. முதற்கட்டமாக, கைரேகை ஆகியவற்றை எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் முன்னாள் குற்றவாளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்களா என, விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.