மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாகவும் , அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, கல்வி நிறுவனங்களில் தாளாளர் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.


மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். 




இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நான்கு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திமுகவின் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார்,  உள்ளிட்ட ஒன்பது பேர் மீது மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி அளித்துள்ள புகாரில்,




தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள். மேலும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். 




இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார்.  இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  ஆடுதுறை வினோத் , திருவெண்காடு ரவுடி விக்னேஷ் , கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். 




இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும்  5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். முன்பு பாமகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். அகோரம் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.