பிகார் கோச்சிங் சென்டர் ஒன்றில் ஆசிரியர் ஒருவர், 5 வயது மாணவனை இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சமூகவலை தளத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வலியால் துடித்து கொண்டிருக்கும் சிறுவனை, தடியை கொண்டு ஆசிரியர் தாக்குகிறார். பின்னர், அடித்த அடியில் அந்த தடி இரண்டாக உடைந்து விடுகிறது. தடி உடைந்த பிறகும், ஆசிரியர் மாணவரின் கன்னத்தில் அறைந்து குத்த தொடங்குகிறார். இதனை தொடர்ந்து, மாணவரின் முடியை பிடித்து இழுக்கிறார்.
இதற்கிடையில், சிறுவன் அழுது கொண்டே அடிப்பதை நிறுத்தும்படி ஆசிரியரை கெஞ்சுகிறார். தரையில் விழுந்து புரள்கிறார். ஆனால் ஆசிரியர் தாக்குவதை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். மற்ற மாணவர்கள் இதை பார்த்து அச்சம் கொள்கிறார்கள். ஜெயா கோச்சிங் கிளாஸ் என்ற டியூஷன் சென்டரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொடூரமான தாக்குதலால் சுயநினைவை இழந்த மாணவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் நிலை குறித்து அறிந்ததும், ஆசிரியரை பிடித்து அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதுபற்றி பயிற்சி மையத்தின் உரிமையாளர் அமர்கந்த் குமார் கூறுகையில், "ஆசிரியர் சோட்டு உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதால் இவ்வாறு செய்துள்ளார்" என்றார்.
உள்ளூர்வாசி ஒருவர் முழு சம்பவத்தையும் பதிவு செய்து ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வெளியிட்டார். இது வைரலகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் இறக்கம் இன்றி தாக்கிய சம்பவம் பிகார் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்