மனைவியை சேர்த்து வைப்பதாக தெரிவித்து ரூ. 5 ஆயிரம் பெற்றுகொண்டு ஏமாற்றிய மந்திரவாதியை கணவன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருவபர் 40 வயதான சாந்தனு பிஹிரா. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளது.  இந்த நிலையில், சாந்தனு பஹிராவுக்கு அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கு அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த சாந்தனுவின் மனைவி பொறுமை இழந்து தன் 2 குழந்தைகளையும் அழைத்துகொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். கோவம் சரியாகி திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக சாந்தனு எவ்வளவோ சமாதானம் செய்தும் அவரது மனைவி வீட்டுக்கு வரவில்லை.


இதையடுத்து, வேறு வழி தெரியாத சாந்தனு, மனைவியுடன் இணைந்து வாழ மந்திரவாதியின் துணையை நாடியுள்ளார். மனியா பாபர் என்று அழைக்கப்படும் 47 வயதான இந்த மந்திரவாதியை பற்றி தெரிந்துகொண்ட சாந்தனு, அவரிடம் தனது மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ஒப்புகொண்ட சாமியார் ரூ. 5000 தரும்படி கேட்டு வாங்கிகொண்டு சில பல பூஜைகளை செய்துள்ளார். 


மனைவி திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த சாந்தனு வெகுநாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மந்திரவாதி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். இதற்காக, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு நேராக மந்திரவாதி மனியா பாபர் வீட்டுக்கு சென்று ரூ. 5000 பணத்தை திருப்பி தருமாறு முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


வாக்குவாதம் நீண்ட ஏற்படவே, பொறுமையிழந்த சாந்தனு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மந்திரவாதி மனியாவை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். இதனால் நிலை குலைந்துபோன மந்திரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாந்தனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மந்திரவாதி மனியா மராட்டியத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்தது. மேலும், மனியா பாபர் கால்நடையை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.