சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா என்ற கொள்ளை கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்து காவலாளி கோபாலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல் தாளமுத்து நடராஜனின் மகன்களை அடித்து காயப்படுத்தி விட்டு தனி அறையில் அடைத்து வைத்தது. பின்னர் வீட்டில் இருந்து 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தாளமுத்து நடராஜன் இருந்த அறையின் கதவை தட்டிய போது, துப்பாக்கியுடன் வெளியே வந்த தாளமுத்து நடராஜனையும் துப்பாக்கியால் சுட்டும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்தது. பின்னர் டபுள் பேரல் துப்பாக்கி, கை துப்பாக்கி, நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கொள்ளை கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அவரது மனைவி பீனா தேவி, கொழுந்தியாள் சாந்து, அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெகதீஸ், ஜெயில்தார்சிங் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


ரியல் தீரன் சம்பவம்.. பவாரியா கும்பல் வழக்கில் மீண்டும் அதிரடி... அரியானா செல்லும் தமிழ்நாடு போலீஸ்


இவர்களில் கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ், வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்களில் 2 பேர் ஜாமீனில் சென்று தலைமறைவாகிவிட்டனர். தற்போது அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தேசிய சட்ட பணிகள் ஆணையம் மூலம் இலவசமாக வழக்கறிஞர்கள் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 



அசோக் என்ற லட்சுமணன், தாளமுத்து நடராஜனின் கொலை சம்பவம் நடந்தபோது தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் இருந்ததாகவும் ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அங்கிருந்து நேரில் வந்து சாட்சியம் அளிக்க பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராக அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கு வரும் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பீனாதேவி, சாந்து, பல்லு ஆகிய 3 பேரையும் கைது செய்வதற்கு சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி அரியானா சென்றிருந்தனர். அப்போது, பீனாதேவி அங்குள்ள ஒரு ஊரில் பஞ்சாயத்து தலைவியாக இருந்தது தெரியவந்தது. மேலும், அந்நேரத்தில் அங்கு தேர்தல் நடந்ததால் போலீசார் அவரை கைது செய்யாமல் வந்துவிட்டனர். இதற்கிடையில் தற்போது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையிலான காவல்துறையினர் அரியானா மாநிலத்திற்கு அவர்களை தேடி இந்த வாரத்தில் இந்தமுறை அந்த 3 பேரையும் கைது செய்து அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.